‘தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைச் சுருக்கும் வகையில், ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் கட்ட 50 ஏக்கர் பரப்பளவு நிலம் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ராஜராஜன் அருங்காட்சியகம் என்று காரணம் காட்டி, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நிலப்பகுதியைக் கையகப்படுத்தி, தமிழையும் தமிழ் வளர்ச்சியையும் சுருக்கிவிட இடம் தரக்கூடாது’ என தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் பா.இறையரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு என்று நூற்றுப்பத்து ஏக்கர் தமிழின் பல்துறைகளையும் வளர்க்க வேண்டும் எனத் தரப் பெற்றுள்ள நிலத்தில் அரசு அலுவலகங்கள், மூலிகைப் பண்ணை, பொதுக் குடியிருப்பு வளாகம் என வேறு வகைப் பணிகளுக்கான கட்டடங்களுக்காகக் கைப்பற்ற வேண்டாம் எனத் தஞ்சாவூர்த் தமிழ் அமைப்புகள் தடுத்தன.
இப்போது, ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் கட்ட 50 ஏக்கர் பரப்பளவு நிலம் எடுத்துக் கொள்ளத் திட்டம் கூறியுள்ளனர். தமிழ்க் கல்விக்கான பல துறைகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஆவணங்களுக்குமே நூறு ஏக்கர் போதாது.
ராஜராஜன் பிறந்து வளர்ந்த உடையாரூர் (உடையாளூர்) , திருப்புறம்பியம், குடந்தை, வல்லம், இராசராச முத்தரையர் கோட்டை (ராரா முத்தரைக் கோட்டை), வாளாமர் கோட்டை ஊர்களில் அல்லது ராஜராஜனின் அரண்மனை இருந்த வெண்ணாற்றங்கரை சார்ந்த பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கலாம். ராஜராஜனின் மனைவி உலகமா தேவியார் கோயில் கட்டிய திருவையாறு முதலிய தென்பகுதி ஊர்களிலும் கட்டலாம்.எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைச் சுருக்கும் வகையில், வரலாறு, ராஜராஜன் என்று காரணம் காட்டி, அதன் நிலப்பகுதியைக் கையகப்படுத்தி, தமிழையும் தமிழ் வளர்ச்சியையும் சுருக்கிவிட இடம் தரக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

