ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற கோடீஸ்வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் திரட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2019-ல் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் விசாரணை ஆவணங்களை, அந்நாட்டு நீதித் துறை கடந்த 19-ம் தேதி முதல் வெளியிடத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த ஆவணத் தொகுப்பில், பல முக்கிய பிரமுகர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த ஆவணங்களில் இருந்த ஒரு மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டியிருந்தார். பில் கேட்ஸுடனான தனது உறவு குறித்த எப்ஸ்டீன் கோப்புகளில், “ரஷ்யப் பெண்களுடனான பாலியல் உறவின் விளைவுகளைச் சமாளிக்க பில் கேட்ஸுக்கு மருந்துகளைப் பெற்றுத் தருவது முதல், திருமணமான பெண்களுடன் அவர் சட்டவிரோதமாகச் சந்திப்புகளை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பது வரை இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

