கருத்து தெரிவித்து சவுக்கு சங்கரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

18 0

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக கருத்து தெரிவித்து, அவரை பெரிய ஆளாக்க நீதிமன்றம் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிரட்டி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலமாக 3 மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வாங்கிவிட்டு, தொடர்ந்து அவதூறான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஜாமீன் நிபந்தனைகளை மீறி செயல்படுவதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு, ‘இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கவோ, பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் பேசி வீடியோ வெளியிடவோ கூடாது என கூடுதல் நிபந்தனைகளை விதித்ததுடன், மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும்’ என தெரிவித்தனர்.

மேலும், ‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைவர் தலைமையிலான குழு அமைத்து, சவுக்கு சங்கரை பிப். 2-ம் தேதி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை அறிக்கையை பிப்.3-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். யாரையும் சந்திக்க கூடாது. வழக்கு தொடர்பாக யாரிடமும் பேச கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசு தரப்பில், ஏற்கெனவே நீதிபதியை மாற்றம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இப்போது தொடரப்பட்ட சவுக்கு சங்கரின் இந்த மனுவை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சவுக்கு சங்கருக்கு எதிராக கருத்து பேசி அவரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை. யாரையும் குற்றம் சொல்வதற்காக இங்கு வரவில்லை’ என்று கூறி, சங்கரின் மனு குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.9-ம் தேதி ஒத்திவைத்தனர்.