சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

5 0

நுகேகொடை நகரசபை சந்திக்கு அருகில் சட்டத்தரணிகள் இருவரை வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்து, வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 30 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை முடித்துவிட்டுத் திரும்பிய இரண்டு சட்டத்தரணிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதேசவாசிகள் சிலர் கூட்டமாகச் சேர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, வாகனத்தைச் சேதப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிகளால் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முதற்கட்டமாக மாதம்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பெப்ரவரி 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நுகேகொடை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது நேற்று திங்கட்கிழமை (2) ஹக்மனை, புஹுல்வெல்ல பகுதியில் வைத்து 31 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது சட்டத்தரணிகளை செல்லவிடாமல் தடுத்தமை மற்றும் அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். அத்தோடு ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.