வங்கதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் இடஒதுக்கீட்டில் திருத்தம் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் மிகப்பெரிய கிளர்ச்சியாக மாறியது.
அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கடும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது நிகழ்ந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசாமான் கான் கமால் ஆகியோருக்கு கடந்த நவம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்கள் கிளர்ச்சியின்போது டாக்காவின் சங்கர்புல் பகுதியில் 6 பேர் கொல்லப்பட்ட ஒரு வழக்கில் முன்னாள் டாக்கா பெருநகர காவல் ஆணையர் ஹபிபுர் ரஹ்மான், முன்னாள் இணை ஆணையர் சுதீப் குமார் சக்ரவர்த்தி, முன்னாள் கூடுதல் துணை ஆணையர் ஷா ஆலம் முகமது அக்தருல் இஸ்லாம் ஆகியோருக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள ஒருவர் உட்பட 5 முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு வெவ்வேறு கால அளவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு வங்கதேச பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 12ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

