ஹட்டனில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து சுமார் 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியுடன் ஓடிய சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார் இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
சந்தேக நபர், ஹட்டன் நீதவான் எஸ்.ராம்மூர்த்தி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று, தங்கச் சங்கிலியை வாங்குவதாகக் கூறிய சந்தேக நபர், அதற்கான பணத்தை செலுத்த தனது மனைவி வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் வரும் வரை குறித்த நகைக்கான கட்டண விபரங்களைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், தங்கச் சங்கிலிகளை கையிலெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே அங்கிருந்த இரண்டு பெண் ஊழியர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
ஹட்டன் தலைமை பொலிஸ் அதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபர் அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தங்கச் சங்கிலியுடன் ஹட்டன் முதல் வட்டவளை வரை ரயில் பாதையோரமாக நடந்து சென்றுள்ளார். அங்கிருந்து நாவலப்பிட்டிக்குச் சென்ற அவர், உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் குறித்த நகையை 1,69,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தப்பணத்தில் ஒரு தொகையை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையை கடன் காரர்களுக்கும் வழங்கியுள்ளதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபரிடமிருந்து 10,000 ரூபாய் மாத்திரமே மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது

