நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை எதிர்த்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்தப் போரை நிறுத்த 20 அம்ச சமாதான திட்டம் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்தார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ரஷ்யா – உக்ரைன் – அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் எல்லையில் உள்ள முழுமையாக கைப்பற்றப்படாத கிழக்குப் பகுதிகளில் தனது படைகளை உக்ரைன் திரும்பப் பெற வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை விடிய விடிய நடைபெற்று நேற்று அதிகாலை நிறைவு பெற்றது.இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பிரதிநிதிகள் கூறும்போது, “ரஷ்யா கைப்பற்றி உள்ள உக்ரைனின் கிழக்கு பகுதிகளை திருப்பித் தர வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

