அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு!

21 0

ட்ரம்ப் தொடங்கிய ‘தி போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது.

சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

முன்னதாக ‘தி போர்டு ஆப் பீஸ்’ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ‘‘இதுவரை அமைக்கப்பட்ட வாரியங்களிலேயே இது மிகவும் மதிப்புமிக்க வாரியம். இந்த அமைதி வாரியம், ஐ.நா.வை விட அதிக வேலைகளைச் செய்து முடிக்கும். எங்களுக்கு அனைவரும் வேண்டும். எல்லா நாடுகளும் வேண்டும். மக்களாட்சி நடைபெறும் அனைத்து நாடுகளும் வேண்டும். அப்போது, எங்களுக்கு ஒருபோதும் பிரச்சினை இருக்காது.

இதுவரை அமைக்கப்பட்ட வாரியங்களிலேயே இதுதான் சிறந்த வாரியம். இதில் அனைவரும் இருக்க விரும்புகிறார்கள். இதில், சில சர்ச்சைக்குரிய நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலையைச் செய்து முடிக்கும் நபர்கள். இவர்கள் பெரும் செல்வாக்கு மிக்கவர்கள்.

வாரியத்தில் உள்ள அனைவரும் திறமையானவர்கள். எனவே, அவர் (ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்) அழைக்கப்பட்டுள்ளார். அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்த வாரியம் சிறப்பானதாக இருக்கப் போகிறது’’ என தெரிவித்திருந்தார்.