பிரித்தானிய வலதுசாரி அமைப்பு ஒன்றைச் சேர்ந்த 10 பேருக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால், கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான அந்தக் கடுமையான நடவடிக்கைகளால், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என பயந்து அவற்றைப் பின்பற்ற பிரான்ஸ் பொலிசார் தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கி, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.
ஏற்கனவே, Gravelines என்னுமிடத்தில், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏற முயன்ற புலம்பெயர்வோர் சிலரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் வெளியாகின.

பிரித்தானிய வலதுசாரியினருக்கு தடை இந்நிலையில், Raise the Colours அமைப்பைச் சேர்ந்த 10 பேருக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
நேற்றுமுன் தினம் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சிறுபடகுகளை தேடித்தேடி அடித்து நொறுக்கும் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபடும் சிலரைக் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, புலம்பெயர்வோருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட Raise the Colours அமைப்பைச் சேர்ந்த 10 பேர் பிரான்சுக்குள் நுழையவும், பிரான்சில் தங்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன் நாட்டின் சட்டத்தின் விதி, விவாதத்திற்குரிய விடயமல்ல என்று கூறியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், வன்முறை மற்றும் இனவெறுப்பு செயல்களுக்கு நம் நாட்டில் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

