அம்பாறையில் வெற்றுக் காணியில் இருந்து கைக்குண்டு மீட்பு

11 0

அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றுக் காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் இருந்தே இன்று(06.012026) குறித்த கைகுண்டு மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குண்டு,  பாகிஸ்தான் தயாரிப்பு என்றும், இதனை கடந்த காலங்களில் இந்த பகுதியில் நடமாடிய தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்,  அண்மையில் இந்த காணியில் உழவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மழை காரணமாக புதைந்திருந்த கைக்குண்டு நிலத்திற்கு மேல் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த காணி வழியாக பாடசாலைக்கு பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரே கைக்குண்டை இனங்கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த சவளக்கடை பொலிஸார் கைக்குண்டை பார்வையிட்டதுடன்,  குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகயை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட கைக்குண்டை அந்த இடத்தில் இருந்து அகற்றி, செயலிழக்கம் செய்வதற்கான கட்டளை  இன்று(06) நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கைக்குண்டு தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.