முதலை இழுத்துச் சென்ற நபர் சடலமாக மீட்பு

27 0

அம்பாறை மாவட்டம்  ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை (04) அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலையொன்று இழுத்துச் சென்று காணாமல் போன இளம் குடும்பஸ்தர் திங்கட்கிழமை (05​) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒலுவில்-1  அஸ்ரப் நகர்-12   பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் குத்தூஸ் றமீஸ்  (வயது-38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்  இரண்டு நாட்களாக ஒலுவில் வாழ் பொதுமக்கள், அனர்த்த  முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர்,சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் அல் – உஸ்வா சம்மாந்துறை ஜனாஸா அமைப்புக்களின் உதவியுடன் மேற்படி நபரின் சடலம்  மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை  அக்கரைப்பற்று  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்  வேண்டுகோளிற்கிணங்க   திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில்   மேற்கொள்ளப்பட்டு முதலை  தாக்கியதால் ஏற்பட்ட  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம்   கையளிக்கப்பட்டுள்ளமை    குறிப்பிடத்தக்கது.