பங்களாதேஷின் ராஸ்பாரி மாவட்டத்தில் 29 வயதுடைய அமிர்த மண்டல் என்ற இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சாம்ராட்’ என்று அழைக்கப்படும் அவர், பாங்ஷா பகுதியில் ஒரு கும்பலை வழிநடத்தி வந்ததாகவும், புதன்கிழமை இரவு ஒருவரது வீட்டில் பணம் கேட்டு மிரட்டியபோது திருடன் என நினைத்து திரண்ட ஊர் மக்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.படுகாயமடைந்த அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அமிர்த மண்டலின் சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம், இது மத ரீதியான தாக்குதல் அல்ல என்றும், தனிப்பட்ட குற்றச் செயல்களின் பின்னணியில் நடந்த வன்முறை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.
இருப்பினும், கடந்த வாரம் மைமென்சிங் பகுதியில் தீபு சந்திர தாஸ் என்ற மற்றொரு இந்து இளைஞர் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், தற்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

