ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறைப்பிடித்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.

