உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

9 0

சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் வசிப்பிடத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது குறித்து தங்கள் பாடசாலை அதிபர் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கூறியுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக 011 2784537 அல்லது 011 2788616 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனர்த்தம் காரணமாக முன்னர் ஒதுக்கப்பட்ட பரீட்சை மையத்தில் ஒரு மாணவர் பரீட்சை எழுத முடியாவிட்டால், அவர்கள் முன்கூட்டியே திணைக்களத்திற்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில், குறிப்பாக பேரிடர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று பரீட்சை நிலையத்தினை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் சூழ்நிலை காரணமாக விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ உடனடியாக உதவியை பெறுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய சந்தர்ப்பங்களில், வலயக்கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபரால் சான்றளிக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.