மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாழை குளம் பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் தற்போது வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தை அண்மித்த ஈர நிலப் பகுதிகளில் Australian White Ibis என்ற புலம் பெயர் பறவைகளே தற்போது வந்துள்ளதைக் காண முடிகின்றது.
அப்பகுதிக்கு மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வனப்பிற்கு மேலும் மெரூகூட்டுவதாக அமைந்துள்ளது. இப்பறவையினம் குறிப்பாக வருடாந்தம் மார்கழி, தை, மாதங்களில்; இப்பிரதேசத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருகை தருவதாகவும் பின்னர் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குஞ்சுகளுடன் அவுஸ்ரேலியா நாட்டிற்குத் திருப்பிச் செல்வதாகவும், சூழலியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இக்காலப்பகுதியில் இவ்வாறு பிரமிக்கதக்க பறவைகளின் அழகை உள்நாட்டு வெளிநாட்டவர்கள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இவ்வாறு இருக்கின்ற இந்நிலையில் அப்பறவைகள் அமைந்துள்ள சரணாலயப் பகுதியில் சிலர் பொறுப்பற்ற விதத்தில் தொடர்ச்சியாக கழிவுகளை வீசி வருகின்றனர்.
இவ்வாறு வீசப்படும் கழிவுகளை இப்பறவைகள் உண்பதால் இறந்து அழியும் அபாயகரமான சூழல் காணப்படுகிறது. அதேபோல் இப்பறவைகள் சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

