சதுரங்கம் விளையாடும் யாழ். மாநகரசபை ஊழியர்கள்

15 0

கொட்டும் மழையில் கழிவகற்ற உழவியந்திரம் இன்றி அவதியுறும்போது அதனை ‘சேர்விஸ்’ போட அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். என்று மாநகரசபையின் சுகாதாரக் குழுத் தலைவர் சாருஜன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, ஊழியர்கள் பொழுதுபோக்குக்காக கரம், சதுரங்கம் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் சபையில் கூறப்பட்டது.

யாழ். மாநகரசபை அமர்வு நேற்று(17.12.2025) இடம்பெற்றபோதே இந்த விடயம் தொடர்பில் நீண்டநேரம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் உதயசிறீ, இங்கு வாகனத் தரிப்பிடத்திலுள்ள கரம் போர்ட், செஸ் போன்ற உபகரணங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். வாகனங்களைப் பராமரிக்க நேரத்தை ஒதுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் தர்சானந், கழிவகற்றல் ஒழுங்காக இடம்பெறவில்லை. கழிவகற்றலில் குளறுபடி ஏற்படுகின்றது. இவற்றைக் கண்காணிப்பவர்களுக்கு ஏன் மேலதிக கொடுப்பனவு வழங்குகிறீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதம பொறியியலாளர், குறிப்பிட்ட கிலோமீற்றர் அளவிலும் கால எல்லைக்குள்ளும் வாகனங்கள் சேர்விஸ் செய்யவேண்டும். அதனாலேயே அவை அனுப்பப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.இதன்போது மாநகரமுதல்வர், ஊழியர்களின் பொழுது போக்குக்காக கரம்போட், செஸ்போட் விளையாட அனுமதிக்கமுடியாது. தொழிலாளிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் இது தொடர்பில் தனியாக விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.