மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

6 0

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று புதன்கிழமை (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுத்தனர்.

நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதியில் மண்சரிவு ஆபத்து இருப்பதாகக் கூறி 50 குடும்பங்களைச் சேர்ந்த 307 பேர் அந்த பகுதியில் உள்ள பாரதிபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தின் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கைகளை நோர்வூர்ட் பிரதேச செயலாளருடன் இணைந்து தோட்ட நிர்வாக முகாமையாளரும் செயல்பட்டனர்.

ஆனால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) தோட்ட வீடுகள் மற்றும் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று மண்களை ஆய்வு செய்து, தோட்டத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை என்று பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில் மோசமான  காலநிலை சீர்கேட்டினால் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது மேலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கு அபாயகரமான வெடிப்புக்களும் உள்ளது மேலும் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகள் ஏற்பட்டு குறித்த பிரதேசம் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது இந்தநிலையில், மீண்டும் அந்த பகுதியில் குடியேற எங்களால் முடியாது எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக தற்போது எங்கள் பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) அறிக்கையில் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் ,

எனவே நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதிக்கு உரித்தான பொறுப்பதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது பாதுகாப்பான இடத்தில் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்டத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

போது பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பினையும் வெளியிட்டனர்.