“ஆஸ்திரேலிய பிரதமர் யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார்” – நெதன்யாகு குற்றச்சாட்டு

7 0

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் யூத எதிர்ப்புவாதத்தைத் தூண்டுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் கைதாகியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவிப்பதாக ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனீஸுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தெரிவித்தேன்.

அந்தக் கடிதத்தில், ‘பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் உங்கள் முடிவு யூத எதிர்ப்புத் தீயில் எண்ணெய் ஊற்றுகிறது. இது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வெகுமதி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் யூதர்களை அச்சுறுத்துபவர்களுக்கு இது தைரியத்தை அளிக்கிறது, மேலும் இப்போது உங்கள் தெருக்களில் பரவுகிறது.

உங்கள் அரசும் ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு பரவுவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. நீங்கள் நோய் பரவ அனுமதித்தீர்கள், அதன் விளைவு இன்று நாம் கண்ட யூதர்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள்” என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அரசு, பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் அல்பனீஸ் ஐ.நா. பொதுச் சபையில் கூறியிருந்தார். முன்னதாக, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை அடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை கூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், தாக்குதலைக் கண்டித்ததுடன், கட்டவிழ்த்து விடப்பட்ட இத்தீமை புரிந்துகொள்ள முடியாதது என்று கூறினார்.

2023 அக்டோபரில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள யூத ஜெப ஆலயங்கள், கட்டிடங்கள் மற்றும் கார்கள் மீது தொடர்ச்சியான யூத எதிர்ப்புத் தாக்குதல்கள் நடந்து வருகிறது.