ஐக்கிய தேசியக் கட்சியின், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று கூறப்படுபவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது ‘வசந்தன்’ தாக்கல் செய்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
நீதியரசர்கள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீள பெற அனுமதிக்குமாறு கோரினார்.
2008, ஜனவரி 1, அன்று கொழும்பு பொன்னம்பலவனேஸ்வரர் சிவன் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்போது, மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார்.இதனையடுத்து மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தன்னைச் சுட்ட நபர் என்று குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டினார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சான்றுகள் அவரைக் குற்றத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.
இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று மனுதாரர் சட்டத்தரணி ஒப்புக்கொண்டார், எனவே, மனுவை மீள பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.
மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தீர்ப்பை உறுதி செய்தது.

