மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களிலிருந்துவரும் வெள்ள நீர் காரணமாகவும் மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆற்றுவெள்ளம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியுடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அப்பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

கிரானிலிருந்து புலிபாய்ந்தகல் செல்வோருக்காக கிரான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இயந்திர படகு சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அவசர தேவைக்கு செல்வோரும் பல்வேறு தேவைக்கு கிரான் பகுதிக்கு வந்த மக்களும் இயந்திர சேவையூடாக கொண்டுசெல்லும் பணிகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
இதேநேரம் மகாவலி ஆற்று வெள்ளநீர் மற்றும் மாவிலையாறு வெள்ளநீர் பெருக்கம் காரணமாக வாகரை கல்லரிப்பு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையமும் வாகரை பிரதேச செயலகமும் முன்னெடுத்துவருகின்றது.
வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 12476 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

