ராமேசுவரம் கடலோர பகுதிகளில் விடிய விடிய மழை!

31 0

ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் புதன்கிழமை காலை வரையிலும் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

ராமேசுவரம் பேருந்து நிறுத்தப் பகுதி, தங்கச்சி மடம் ராஜீவ் காந்தி நகர், மண்டபம் கலைஞர் நகர், அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அங்கு தேங்கிய மழைநீரை கோயில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

<div class="paragraphs"><p>பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் பெய்த மழையில் விளையாடும் சிறுவர்கள்.</p></div>

பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் பெய்த மழையில் விளையாடும் சிறுவர்கள்.

முன்னதாக, மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்திருந்ததால், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதிகளில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

மேலும் பாம்பனில் 3-ம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பாம்பனில் 62 மி.மீ., ராமேசுவரம் 57 மி.மீ, மண்டபம் 47.40 மி.மீ, தங்சச்சிமடத்தில் 40.60 மி.மீ, மழையும் பதிவானது.