அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 04 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் அங்கிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் மீட்டியாகொடை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மஹதுரு இசுரு” என்பவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

