நாமல் ராஜபக்ஷவை இளவரசர் என்று நாங்கள் குறிப்பிட போவதில்லை. ஹரின் பெர்னான்டோ, நாமல் ராஜபக்ஷவை விமர்சிப்பார்,புகழ்வார் அது அவரது பழக்கம். ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சியினர் எம்முடன் இணைய வேண்டும். இல்லையேல் அரசாங்கமே பலமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் விதாரண தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் வெற்றியா,தோல்வியா என்பதை குறிப்பிட முடியாது. பொது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.
நாமல் ராஜபக்ஷவை நாங்கள் இளவரசர் என்று குறிப்பிடவுமில்லை.அவ்வாறு ஏற்க போவதுமில்லை.அதற்கான அவசியமும் கிடையாது.எதிர்க்கட்சித் தலைவரின் தலைமைத்துவத்தில் நாங்கள் செயற்படுகிறோம்.ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சிப்பார்.பின்பு புகழ்வார்.அது அவரது முறைமை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
பொதுஜன பெரமுனவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கம் எமக்கு கிடையாது.ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும் .இல்லையேல் அரசாங்கம் தான் பலமடையும் என்றார்.

