கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சியில் கார்த்திகை மலரே…! ; இசைப்பாடல் வெளியீடு

23 0

நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சியில்  ஞாயிற்றுக்கிழமை (23) ‘கார்த்திகை மலரே!’ என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க. சத்தியன் பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ”கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?” என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின் ஒலிப்பதிவை மதி மனு மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பான கார்த்திகை மலரே! என்ற இந்த இசைப்பாடலை பாடல் வரிகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் எவரும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.