தமிழ் மொழி, தமிழ் கடவுள், தமிழ் மக்கள் மீது பற்றும், பாசமும் கொண்டுள்ளார் பிரதமர் மோடி – ஜி.கே. வாசன்

25 0

கோவையில் பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, நிதி விடுவித்து, ஆற்றிய உரையானது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025 ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, நிதி விடுவித்து, ஆற்றிய உரையானது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது, நன்றிக்குரியது.

நேற்று (நவம்பர் 19) பிரதமர் மோடி கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்பதை உறுதி செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

நவம்பர் 21-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. குறிப்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு அமைகிறது.

பிரதமர் கோவை இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டு, வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடியது பெருமைக்குரியது. மேலும் பிரதமர் விவசாயத்தில் சாதனைப் படைத்த விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது போற்றுதலுக்குரியது.

பிரதமர் மோடி இந்த வேளாண் மாநாட்டில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம், மொத்தம் ரூ. 18,000 கோடி நிதியை விடுவித்தார். இது இத்திட்டத்தின் 21-வது தவணை நிதி என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21,80,204 விவசாயிகள் பயனடைவார்கள்.

இயற்கை வேளாண்மையைப் பின்பற்றும் விவசாயிகளுக்கும், விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற வேண்டும், மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவசாயம் சார்ந்து பிரதமர் ஆற்றிய உரையானது இந்தியா முழுவதற்குமான விவசாயிகளுக்கு பெரும் பயன் தரும்.

மிகவும் முக்கியமாக பிரதமர் தமிழ் அறிந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன் என்று கூறி, தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களின் துணிச்சலைப் பாராட்டி, முருகப் பெருமானுக்கு படைக்கப்படும் திணை வகைகள் பற்றி கூறி, தென்னகத்தின் சக்தி பீடம் கோவை என்று பேசியதன் மூலம் தமிழ் மண், தமிழ் மொழி, தமிழ்க்கடவுள், தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் தமிழ் மக்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றும், பாசமும், முக்கியத்துவமும் வெளிப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்டை உயர்த்திய பெருமை மத்திய அரசுக்கு உண்டு. உலக அரங்கில் இயற்கை வேளாண்மையின் மையமாக இந்தியா விளங்குவதற்கு ஏதுவாக இந்திய வேளாண் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, விவசாயத்தை, விவசாயிகளை முன்னேற்ற மத்திய அரசு மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் வெற்றியடையட்டும்.

தென்னிந்திய விவசாயிகளுக்கு வேளாண்மையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடிக்கும், விவசாயிகளைப் பாதுகாக்கும் மத்திய அரசுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.