முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

45 0

முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இவ்வமைப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,

2025ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம், கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலாத்தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் இன்றைய தினம் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதிக் கடிதத்தை பிரதேச சபையின் தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம்.

ஏற்பாட்டுக் குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர மாவீரர் நாள் அமைப்பு என பெருந்திரளான மக்களுடன் கூட்டம் கூடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய மாதமாகும். அதனால் மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனத்தோடு செய்ய வேண்டும். அந்த வகையிலே இன்றைய தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.

அதனை தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் எழுச்சிக் கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு கட்சிகள் தலையிடக்கூடாது. கட்சி பேதங்களை கடந்து அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றனர்.