இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு பயணிக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களுடன் பேசியபோது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது என்பதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தனது இந்திய பயணம் குறித்து அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அதன் பின்னர், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதனால் இந்தியா – அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. அதேவேளை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக ட்ரம்ப் கூறி வருகிறார்.
இது குறித்து ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“இந்தியாவுடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என்பது நல்ல விடயம். அவர் எனது நண்பர், சிறந்த மனிதர். என்னை அவர் இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
நான் முடிவுக்கு கொண்டு வந்த எட்டு போர்களில் ஐந்து அல்லது ஆறு போர்கள், வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன. உதாரணமாக, இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், ‘நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்’ என்று சொன்னேன். 24 மணிநேரத்துக்குள் நான் போரை முடித்துவைத்தேன். வரிவிதிப்பு இல்லையென்றால், அந்த போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது. வரிவிதிப்பு ஒரு சிறந்த தேசிய பாதுகாப்பு முறை” என்று கூறினார்.

