அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகோகொடயில் நடைபெறவுள்ள பேரணியில் நாங்கள் பங்கேற்போம்.ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.
அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அரசியல் கொள்கை வேறுபாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது முறையற்றது.
அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன.இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
பாதாளக்குழுக்கள் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைய செயற்படுகின்றன. அரசாங்கம் குறிப்பிடும் போது துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன.
பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுவது தேசிய பாதுகாப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது என்றார்.

