இந்தியா மட்டுமின்றி, உலகின் பசியையே போக்க பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வாழ்க்கை வரலாற்றை ‘தி மேன் ஹு ஃபெட் இந்தியா’ (The Man Who Fed India) என்ற தலைப்பில் பிரியம்பதா ஜெயகுமார் எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா, சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். மநீம தலைவர் கமல்ஹாசன், நூலை வெளியிட்டு பேசியதாவது: எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவின் பசியைப் போக்கியவர் என்று மட்டுமே கூறிவிட முடியாது. அவர் உலகத்தின் பசியைப் போக்க பங்காற்றியவர். கடந்த 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அன்னவாசல் என்ற பெயரில் ஜைனர்கள் உணவு வழங்கினர்.ஆனால், அறிவியல் ரீதியாக இந்தியாவை அன்னவாசலாக மாற்றியவர் சுவாமிநாதன். ‘இந்தியாவில் பசியைப் போக்க முடியாது, உணவுத் தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய முடியாது’ என்று பலர் கூறினர். தொடர் பஞ்சத்தின்போது இந்தியாவுக்கு அமெரிக்கா கோதுமை வழங்கியது.அந்த நாட்டில் தகுதியற்றதாக பார்க்கப்பட்ட அந்த கோதுமை நமக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தது. இது உதவி என்ற பெயரில் நமக்கு கொடுக்கப்பட்ட அவமானம். இந்த அவமானத்தை நீக்கி, உணவுப் புரட்சியை ஏற்படுத்தியதில் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் விஞ்ஞானி நார்மன் பார்லா ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு.
எடை குறைவான நெல்லை இவர்கள் கண்டுபிடித்தனர். உணவுப் பாதுகாப்புதான் தேசியப் பாதுகாப்பு என்பதை ஒரு சிலரே உணர்ந்தனர். நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாவிட்டால் ஒருபோதும் காலனித்துவ சக்திகளுக்கு எதிராக நிற்க முடியாது என்பதை சுவாமிநாதன் புரிந்துகொண்டார்.
அவர் இல்லாமல், இந்தியா தனது சொந்த விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கை சுதந்திரத்தை பெற்றிருக்க முடியாது. சுவாமிநாதனின் வாழ்க்கையே ஒரு பாடம். அந்த பாடத்தை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் தூதுவன் நான். இவ்வாறு அவர் பேசினார். எம்.எஸ். சுவாமிநாதனின் மகளும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

