வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர்உயிரிழப்பு!

45 0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் திஹாரிய பகுதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வத்துபிட்டிவல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ 419 கிராம வீதியில் நேற்றையதினம்  இரவு, இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், டிராக்டரில் பயணித்த ஒருவர் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தலாவ, ஹிங்குருவெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹெட்டிபொல – தொரகல்ல பகுதியில் சிலாபத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பிங்கிரிய, மெதடம்புவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் குளியாபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – அனுராதபுரம் வீதியில் சிரம்பியாடிய பகுதியில், அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொரி, அதே திசையில் பயணித்த மற்றொரு லொரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது பலத்த காயமடைந்த நான்கு பெண்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மன்னார், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.