மூதூர் இரட்டை கொலை வழக்கு: 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணை!

47 0

மூதூர் – இரட்டை கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (30) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

குறித்த வழக்கானது மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் விசாரணைக்காக நேற்று (30) எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறுமியின் கல்வி கற்கும் உரிமை மற்றும் தரம் ஐந்து புலமைப் பிரிசில் பரீட்சையில் அடைந்த சித்தி என்பவற்றை கருத்திற் கொண்டு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய 25,000 ரூபா பெறுமதியான பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

மேலும், சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மூதூர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு நீதிவான் அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலத்தையும், கல்வி கற்கும் உரிமையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் இத்தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து கடந்த 14.03.2025 அன்று அதிகாலை சகோதரிகளான சிறிதரன் ராஜேஸ்வரி (வயது 68) சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகிய இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவர்களுடைய பேத்தியான 15 வயதான குறித்த சிறுமியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த கொலைகளை தானே செய்ததாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதன் அடிப்படையில் சிறுமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.