இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் பாதாள உலகக்குழு தலைவரும் பிரபள போதைப்பொருள் கடத்தல் காரருமான கெஹெல்பத்தர பத்மேயுடன் காணப்பட்ட தொடர்பு குறித்து நடிகையும் மாடல் அழகியுமான பியூமி ஹங்சமாலியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு பொலிஸ் குழு இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பியூமி ஹங்சமாலியிடம் செவ்வாய்க்கிழமை (21) 03 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கெஹெல்பத்தர பத்மேவுடன் காணப்பட்ட தொடர்பு குறித்து மற்றுமொரு நடிகை மற்றும் நடிகர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.இதன்போது பியூமி ஹன்சமாலி, கெஹல்பத்தர பத்மேவை அறிமுகமானது மற்றும் அவருடன் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தனவா போன்ற விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கெஹல்பத்தர பத்மேவை டுபாயில் வைத்து அறிமுகமானதாக பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளதுடன் பணக் கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். டுபாயில் வைத்து அறிமுகமான போது ஹெகல்பத்தர பத்மே தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும், தனது சொந்த தயாரிப்பான முகத்துக்கு பூசும் ஒருவகை களிம்பை பயன்படுத்துமாறு அப்போது கெஹல்பத்தர பத்மேவுக்கு தான் பரிந்த்துரைத்ததாகவும், சி.ஐ.டி. விசாரணை மற்றும் பத்மே உடனான சந்திப்பு தொடர்பில் பியூமி ஹன்சமாலி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பியூமியிடம் சிறப்பு விசாரணைகளை முன்னடுத்திருந்த குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நடிகை மற்றும் நடிகர்கள் பத்மேவுடன் கொண்டிருந்த தொடர்பு தொடர்பில விசாரணை செய்யவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

