இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கம்பஹா பபா” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
“கம்பஹா பபா”விடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கந்தானையில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கடந்த 18 ஆம் திகதி அன்று ரி56 ரக துப்பாக்கிக்குரிய 50 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து இது தொடர்பில் “கம்பஹா பபா”விடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், “கம்பஹா ஒஸ்மன்” என்பவரை கொலைசெய்வதற்காக “கெஹெல்பத்தர பத்மே” இந்த 50 தோட்டாக்களையும் என்னிடம் தந்தார். தேவைப்படும் போது தோட்டாக்களை திருப்பி தருமாறும் “கெஹெல்பத்தர பத்மே” என்னிடம் கூறினார். என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
“கம்பஹா பபா” இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் “கம்பஹா ஒஸ்மன்” என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளதாகவும் அந்த வீட்டிற்குரிய வாடகை பணத்தை செலுத்தியது “கெஹெல்பத்தர பத்மே” எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“கெஹெல்பத்தர பத்மே” தலைமையிலான மற்றுமொரு கொலை திட்டம் குறித்து நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு இஷாரா செவ்வந்தியுடன் இலங்கைக்கு “கம்பஹா பபா”
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார்.
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.
நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

