லூவ்ரே அருங்காட்சியகத்தில்(Louvre Museum) நடந்த திருட்டு சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாரிஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
லெ பாரிசியன் செய்தி பத்திரிகை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி வெளியிட்ட தகவலில், அருங்காட்சியகத்தில் சீன் நதி பகுதியில் கட்டிட வேலைகள் நடைபெறும் நிலையில் அந்த பலவீனமான இடத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இருவர் அப்பல்லோ காட்சி அரங்கிற்குள் புகுந்து வரலாற்றில் தங்களுக்கென தனி இடம் பிடித்த பேரரசர் நெப்போலியன் மற்றும் பேரரசிக்குரிய ஒன்பது நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் கழுத்து ஆபரணம்(Necklace) கிரீடம்(Tiara) மற்றும் ப்ரொச்(Brooch) ஆகிய விலைமதிப்பற்ற பொருட்களும் அடங்கும்.
கொள்ளையர்களில் மூன்று பேரில் ஒருவர் காவலாளியாக நின்று இருந்ததாக கூறப்படுகிறது.
தற்காலிகமாக மூடல்

இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து லூவ்ரே அருங்காட்சியகம் விதிவிலக்கான காரணங்களால் உடனடியாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தை பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டதி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவ இடத்தில் அருங்காட்சியக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

