நேற்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்ட போதிலும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளாதது பெரும் வேதனையளிப்பதோடு, கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கம்பனியின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் முழுமையாக உழைக்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்படும் கம்பனிகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
கம்பனிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கும் இ.தொ.கா தயாராக இருப்பதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொழில் அமைச்சின் முயற்சி வரவேற்கத்தக்கது எனவும், இந்த முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

