சீனப் பொருட்களுக்கு நவம்பர் 1 முதல் 100% கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு

46 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், முக்கியமான மென்பொருளின் மீதும் அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் இந்த வரிவிதிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில் தற்போது சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், முன்னைய பதிவில், அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதிக்கான விதிகளை கடுமையாக்கும் பெய்ஜிங்கின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்து, சீனா மிகவும் விரோதமாக மாறி வருவதாகவும், உலகை சிறைப்பிடிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிலிருந்து விலகுவதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருட ஆரம்பத்தில் டொனால்ட் டிரம்ப்; சீனப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியதனால், பெய்ஜிங் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியபோது, பொருட்களை நம்பியிருந்த பல அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தன.இதனால், அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.