தாஜூதீனை கொலை செய்தவர்களை சட்ட ரீதியாக அடையாளப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

32 0

றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலையாளிகள் யார் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்திருந்தாலும், சட்டரீதியாக அவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அரசாங்கம் தாஜூதீன் கொலைக்கு முன்னுரிமையளித்து பேசிக்கொண்டிருக்கிறது. இது சிறந்த விடயமாகும். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அரசியல் தேவைக்காக அரசியல் தொடர்புகளுடனேயே இந்தக் கொலை இடம்பெற்றது. வரலாறு மாறினாலும் தேர்தலில் வெற்றி தோல்விகள் ஏற்பட்டாலும் உண்மையை தொடர்ந்தும் மறைக்க முடியாது.

தாஜூதீன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். அந்தக் கொலையை மறைப்பதற்காக அரச சட்ட மருத்துவ அதிகாரி, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் மட்டத்திலிருந்த அதிகாரிகள் இணைந்து சதித்திட்டம் தீட்டி அதனை திடீர் விபத்தாகக் காண்பித்தனர்.

எவ்வாறிருப்பினும் அன்று அதற்காக நாம் குரல் கொடுத்தோம். நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் இது தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனை செய்து தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தியது. ஆனாலும் இந்தக் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போனது. கொலையாளிகள் யார் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்திருந்தாலும், சட்டரீதியாக அவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

தாஜூதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை சாட்சியுடன் நிரூபித்தால் அது மிகவும் பெறுமதிமிக்க ஒரு விடயமாகும். எந்த அரசாங்கமானாலும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த வரலாற்றை அழிக்கவும் முடியாது. அது மாற்றமும் அடையாது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை. எனினும் கொலையாளிகள் உயிருடன் இருந்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

காலதாமதமானாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 20 ஆண்டுகள் ஆனாலும் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இது தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர் கூறுவதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.