மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சி, ஆரம்ப நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அபிவிருத்திக் குழுத் தலைவர், அரச நிறுவனங்களில் காணப்படும் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், கிராமிய வீதிகள் அமைத்தல், குடிநீர் வழங்கல், மலச்சலகூடங்கள் அமைத்தல், கிரான் பாலத்தை முன்னுரிமையின் அடிப்படையில் எதிர்வரும் வருடத்தில் நிர்மாணித்தல், வீதி அமைத்தல், நன்னீர் மீன் வளர்ப்பை அதிகரித்தல், விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான தளபாடங்கள் பெற்றுக்கொள்ளுதல், சுகாதார உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல், மாவட்டத்தில் இயங்காத நிலையில் உள்ள பேருந்துகளை இயக்கச் செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ரூ.9,794 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

