விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
போலியான ஆவணங்களைத் தயாரித்து அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த பிணை மனு இன்று (30) மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன முன் விசாரணைக்கு வந்தது.
பிரசன்ன ரணவீரவின் சட்டத்தரணிகள், பிணை மனுவுக்கு ஆதரவாக மேல் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, சந்தேகநபர்களான பிரசன்ன ரணவீர மற்றும் சரத் எதிரிசிங்க ஆகியோரை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவித்தார்.
அதன்படி, அவர்கள் ஒவ்வொருவரும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், சந்தேகநபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் பிணை நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

