கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாக கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகளின்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் இன்றைய தினம் (18) குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
26 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முற்பணமாகவும் மாதம் 11 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு கடைகளை எடுத்து நடாத்தும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த கடைத்தொகுதிகளில் சுவர்கள் வெடித்து காணப்படுதல், தண்ணீர் கடைகளுக்குள் புகுதல், இதனால் குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைதல், குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்படும் பூ பழுதடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இது தொடர்பாக கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,
பூ மாலை கட்டி வியாபாரம் செய்வதே எமது பிரதான தொழிலாக காணப்படுகிறது. இதனால் பூக்கள் பழுதடைந்தமையால் லட்சக்கணக்கான நட்டத்தை சந்தித்துள்ளேன். மூன்றாவது தடவையாக பூக்கள் அனைத்தும் அழுகிய நிலையில், அவற்றை கொட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல தடவைகள் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் கடைகளின் முன்பகுதியில் பிரதேச சபையினரால் வாய்க்கால் வெட்டப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் பலர் கடைகளை பூட்டிவிட்டுச் சென்றுள்ளதாகவும், தற்போதும் கடைகளை எடுத்த ஏனையவர்களும் விட்டுச் செல்கிற நிலையே காணப்படுகிறது.
நேற்றைய தினம் மழை பெய்ததனால் பூக்கள் அனைத்தும் அழுகி சேதமடைந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கடை உரிமையாளர் நேரடியாக பிரதேச சபைக்குச் சென்றபோதும், அங்கு கூட்டம் நடைபெறுவதால் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய வியாபாரிகள் “பல லட்சம் ரூபாய் செலவழித்து எடுத்த கடைகளை நடத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதேச சபை உடனடியாக தீர்வு காணவேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.







