யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல் மற்றும் தாதியியல் துறைகளில் மூன்று பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இங்கு மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல், தாதியியல் மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பாடத்துறைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 952 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டு துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, பீடத்திற்கு மோசமான உட்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக, விரிவுரை மண்டபங்கள், ஆய்வகம், ஆய்வுக்கட்டுரை அறை, பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடம் ஆகிய வசதிகளைக் கொண்ட ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

