புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலைய அபிவிருத்தி பணிகள் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும்!

39 0

புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். பராமரிப்பு பணிகள் ஒரு ஆண்டுக்கு விமானப்படைக்கு ஒப்படைக்கப்படும். அபிவிருத்திகளை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் திங்கட்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதற்கமைய பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

நாடளாவிய ரீதியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படும்.

தலைநகருக்கு வரும் பொதுமக்களின் பிரதான சேவை மையமாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் காணப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகாலமாக இந்த பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

சாரதிகள் மற்றும் பொதுபயணிகளின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்யும் வகையில் பேருந்து நிலையம் கடந்த காலங்களில் புனரமைக்கப்படவில்லை.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் விமானப்படைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஆண்டு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவுப்படுத்தப்படும்.

புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தததும், பேருந்து நிலையம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். ஏனெனில் அபிவிருத்தி செய்தால் மாத்திரம் போதாது அதனை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

பேருந்து நிலையத்தின் அபிவிருத்தியை தூய்மையான முறையில் பேணும் பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு என்றார்.