ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கான உதாரணமே மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை வழக்கு

97 0

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தோல்வி பற்றி சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தப்பிப்பிழைத்தவர்களுக்கான நீதியைக் கோருவதற்குமான ‘ரெட்ரெஸ்’ அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 70 பக்க விரிவான அறிக்கை திங்கட்கிழமை (8)வெளியிடப்பட்டது.

‘இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டுவருகின்றனர். 2000 – 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உள்நாட்டுப்போர் குறித்து செய்தியறிக்கையிட்டுவந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் சுமார் 44 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் இன்றுவரை இப்படுகொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை’ என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் தொடரும் இத்தகைய தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கானது, தமது உயிரைப் பயணம்வைத்து, சுயதணிக்கை செய்து அல்லது வேறு நாடுகளில் வாழும் இலங்கையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலை விளைவித்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமலராஜனின் கொலை இடம்பெற்ற இடம் ஒருபோதும் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. படங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. தடயவியல் ஆதாரங்கள் எவையும் சேகரிக்கப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு கடமையில் இருந்த சில பாதுகாப்புப்படையினரை விசாரிப்பதற்கே பல வருடங்கள் எடுத்தது. ஆனால், பலர் ஒருபோதும் அடையாளம் காணப்படவும் இல்லை. விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை என இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.