வாழ்வை மீட்க போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் – ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என ஆளுநர் உறுதி

53 0

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை (8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை என பல வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40க்கும் அதிகமான வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு வடக்கு ஆளுநரிடம் இந்த போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது தொழில் மற்றும் தமது வாழ்க்கை நிலை குறித்து மொனிக்கா பிரயங்கனி வீரக்கோன் என்ற ஆசிரியர் கருத்து கூறுகையில்,

8 ஆண்டுகள் நியமனத்தின் பின் இடமாற்றம் என்ற ஒப்பந்தத்தின் பிரகாரமே நாம் வடக்கின் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுச் சென்றிருந்தோம்.

ஆனால், இன்று 12 வருடங்களுக்கு மேலாக சேவைக்காலம் முடிந்துவிட்டது. நாம் எமது இடமாற்றம் குறித்து கோரிக்கைகளை சமர்ப்பித்து அது கிடைத்தும் குறிப்பாக அதிபர் எம்மை விடுவித்தும் வலயக் கல்வி அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

இதனால் நாம் பல்வேறு இடர்பாடுகளை நாளாந்தம் எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதே நேரம் தமிழ் மக்கள் வாழ்வியல் போன்று எமது வாழ்வியல் இல்லை. இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.

இவ்வாறு இடமாற்றம் கிடையாத விரக்தி ஒரு புறம் இருக்க குடும்பத்தில் பிரச்சினை மறுபுறம் உருவானதால் ஹம்பகா மடுகங்கந்த தேசிய பாடசாலை ஆசிரியர் தற்கொலை செய்திருந்தார்.

இதேபோன்று பல அசிரியர்கள் கணவர்களால் விவாகரத்துக் கோரும் நிலைக்குள் சென்று நீதிமன்றுடன் வாழ்வை மீட்க நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எமது வாழ்வியல் நிலையை அதிகாரிகள் உணருவதாக இல்லை. இன்று காலை ஆளுநரை சந்திக்க வந்த அனைவரும் வடக்கின் பல பாடசாலைகளில் 12 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டு வருகின்றவர்கள்.

வடக்கு, கிழக்கின் ஆசிரியர் இடமாற்ற கோவையின் பிரகாரம் தாம் சேவையை குறித்த மாவட்டங்களில் நிறைவு செய்தும் இதுவரை இடமாற்றங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

கடந்த அரசின் அதிகாரிகளிடம் தமது நிலைமைகளை எடுத்துக் கூறியும் தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத விரக்தியுடன் இன்று ஆளுநரிடம் வந்துள்ளோம்.

அவரும் எம்மை முழுமையாக சந்திக்காது மூவரை அழைத்து பேச்சு நடத்துகிறார். எனவே எமக்கான தீர்வு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வரை நாம் எம்மாலான முயற்சிகளை செய்யவுள்ளோம் என்றனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் தீர்வினை வழங்குவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த ஆசிரியர்கள் வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் சென்று அங்கும் தமது பிரச்சினைகளை கூறி கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.