தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய மதத் தலைவர் முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்த தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பிரதேசத்தின் மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இதற்கு கிடைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
2025 தேசிய மீலாதுன் நபி விழாவிற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கலாசார மற்றும் வரலாற்றுப் பெறுமதியை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட “ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி” என்ற நூலும் வழங்கி வைக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி பயிலும் இன, மத பேதமின்றி அனைத்து மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார்.
2025 தேசிய மீலாதுன் நபி விழாவில் பங்கேற்றதற்காக ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் மக்களும் முஸ்லிம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபையும் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கின.
இலங்கையின் ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக, இந்த விழாவில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

