அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது

70 0

அரச வைத்திய சாலைகளில் மருந்து வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடுகளும் இல்லை என சுகாதார, ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரவித்தார்.

கண்டி செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற வைபவம் ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போது அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. அதே போல் செயற்கையாகப் பொருத்தப்படும் கண் வில்லைகளுக்கும் தட்டுப்பாடுகள் கிடையாது.

ஆனால் சிலர் குறிப்பிட்ட கம்பனிகளது பொருட்களை மட்டும் தேடும் போது அவை திறந்த சந்தைகளில் இல்லாமல் இருக்கலாம்.

நாம் குறிப்பிட்ட சில ரகங்ளை மட்டுமே வைத்தியசாலைகளுக்கு வழங்குகிறோம். ஆனால் பொதுவாக செயற்கை வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றார்.

புதிதாக வைத்தியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அவை அந்தந்த பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்களால் வெற்றிடம் உள்ளதாக தரப்பட்ட தரவுகளின் படியே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

அதுவல்லாது நாம் அரசியல் ரீதியில் தலையீடுகள் மேற்கொள்வதில்லை. சில உயர் அதிகாரிகள் சரியான தகவல்களை எமக்கு பெற்றுத் தருவதில்லை.

இதனால் குறிப்பிட்ட சிலர் நீண்டகாலம் ஒரே இடத்தில் பணியாற்றும் நிலை காணப்படுகிறது என்றார். தமக்குறிய பொறுப்புக்களை மீறுவோர் அல்லது சம்பந்தமில்லாத விடயங்களில் தலையிட்டு பிரச்சினைகளை உருவாக்கும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்  என்றும் தெரவித்தார்.