கண்டி – பேராதனை ரயில் சேவைக்கு மட்டுப்பாடு

67 0

மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

குறித்த மூன்று நாட்களிலும் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையே டிக்கிரி மெனிக்கே மற்றும் உடரட்ட மெனிகே ஆகிய ரயில்கள் சேவையில் ஈடுபடாது என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிக்கிரி மெனிகே ரயில் நானு ஓயாவிலிருந்து பேராதனை வழியாக கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும்.

அதே நேரத்தில் உடரட்ட மெனிகே ரயில், கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை வழியாக பதுளைக்கு இயக்கப்படும் என்றும் ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ரயில்களில் பயணிப்பதற்காக கண்டி ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகளுக்காக விசேட பேருந்துகளில் பேராதனை வரை அழைத்து செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.