பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று (29) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தமை, அதிவேகமாக செலுத்தியமை, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

