நோயாளியின் உடல்நிலை தகவலை வெளியாட்களுக்கு பகிரங்கப்படுத்துவது மருத்துவ கோட்பாட்டுக்கு முரண்

45 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டவற்றில் பல தகவல்கள் போலியானவை. இவரது நடத்தை மருத்துவ கோட்பாட்டுக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் முரணானது. இவருக்கு எதிராக நிச்சயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தான் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

நோயாளி ஒருவரின் உடல்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதற்கு பிரதி பணிப்பாளருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவரது பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவது சுகாதாரத்துறை அமைச்சின் பொறுப்பாகும்.இருப்பினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அவரது விடயதானத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளார்.ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளி ஒருவர் எவ்வாறான பதவி நிலைகளில் இருந்தாலும் அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த கூடாது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கு அவ்வாறான அதிகாரம் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டவற்றில் பல குறிப்புக்கள் போலியானவை.இவரது நடத்தை மருத்துவ கோட்பாட்டுக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் முரணானது.ஆகவே இவருக்கு எதிராக நிச்சயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.