வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூடு ; பின்னணியில் இருப்பது “வனாத்தே சது” என்பவரா?

50 0

கொழும்பு, வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

விடுதியில் தங்கியிருந்த சேதவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சசிக பிரியதர்ஷன் என்பவரையும் பால சுப்ரமனியம் அனுஷா என்ற பெண்ணையும் இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவ இடத்தில் வைத்து பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில்,  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட சசிக பிரியதர்ஷன் என்ற நபர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “வனாத்தே துமிந்த” என்வருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “வனாத்தே சது” என்பவரின் தரப்பினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.